இலங்கையில் தரம் குறைந்த நிலக்கரியை வழங்கியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள ‘ட்ரைடன்ட் கெம்பார்’ நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி கொள்வனவு காரணமாக, நான்கு மாத காலப்பகுதியில் இலங்கை மின்சார உற்பத்தி தனியார் நிறுவனத்திற்கு (EGL) ரூ.5.68 பில்லியன் நேரடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
The Sunday Times செய்தியின் அடிப்படையில், 2026 மார்ச் 1 முதல் ஜூன் 30 வரையான காலப்பகுதியில் பதிவான செயற்பாட்டு தரவுகளின் அடிப்படையில் EGL இந்த இழப்பை கணக்கிட்டுள்ளது.
சாதாரண செயற்பாட்டு நிலைமைகளில் காணப்பட்ட வரலாற்று சராசரி நிலக்கரி நுகர்வு விகிதத்தை விட அதிகமான குறிப்பிட்ட நிலக்கரி நுகர்வு காரணமாக ஏற்பட்ட மேலதிக நிலக்கரி நுகர்வினால் ஏற்பட்ட நிதி இழப்பு மட்டுமே இந்த மதிப்பீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் (SOC) சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரம் குறைந்த நிலக்கரியை எரிப்பதால் ஏற்பட்ட மின்சார பற்றாக்குறையை மாற்று எரிசக்தி மூலங்களின் மூலம் ஈடுசெய்வதற்கான செலவுகள் இந்த ரூ.5.68 பில்லியன் மதிப்பீட்டில் சேர்க்கப்படவில்லை. மின்சார பற்றாக்குறையை ஈடுசெய்ய பயன்படுத்தப்பட்ட குறிப்பிட்ட எரிசக்தி மூலங்கள் தெரியாததால், மாற்று மின் உற்பத்தி மூலங்களுக்கான நிதி தாக்கத்தை மதிப்பிட முடியவில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 ஜூன் 30 வரை தரம் குறைந்த நிலக்கரியை பயன்படுத்தியதன் காரணமாக மின் உற்பத்தி நிலையம் மற்றும் உபகரணங்களுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் அசாதாரண தேய்மானம் மற்றும் சேதங்களுக்கான மதிப்பிடப்பட்ட செலவை சமர்ப்பிக்குமாறு குழு EGLக்கு அறிவுறுத்தியிருந்தது. எனினும், அவ்வாறான அசாதாரண தேய்மானம் அல்லது சேதம் ஏற்பட்டதற்கான போதுமான ஆதாரங்கள் தற்போது இல்லை என்பதால், அதற்கான தொகையை மதிப்பிடவில்லை என EGL தெரிவித்துள்ளது.
இதேவேளை, நான்கு மாத காலப்பகுதியில் ‘வழக்கமான பராமரிப்பு செலவு’ என்ற வகையில் ரூ.1.33 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாகவும், அது தரம் குறைந்த நிலக்கரியை பயன்படுத்தியதால் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரியை அரைக்கும் இயந்திரங்களின் பராமரிப்பு, மூல நிலக்கரி மற்றும் பைரைட் போன்ற கனிமக் கழிவுகளை அகற்றுதல், அத்துடன் நிலக்கரி அடைப்புகளை சுத்தம் செய்தல் ஆகியவை இதில் அடங்குகின்றன.
ட்ரைடன்ட் கெம்பார் நிறுவனத்திற்கு இலங்கை நிலக்கரி நிறுவனம் (LCC) எவ்வளவு தொகையை செலுத்தியுள்ளது என்பது அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. எனினும், வழங்குநரின் 14.75 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான செயல்திறன் உத்தரவாதத்தை (Performance Bond) பறிமுதல் செய்துள்ளதாக EGL குழுவிடம் தெரிவித்துள்ளது.
EGL சமர்ப்பித்த அறிக்கையின்படி, 2026 ஆகஸ்ட் 3ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் கொள்வனவு விகிதத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட 51,271,390.14 அமெரிக்க டொலர்களுக்கு சமமான ரூ.16,977,767,155.43 தொகையை முழுமையாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குறிப்பு மாதிரிகளை பரிசோதித்தல் உள்ளிட்ட ஒப்பந்த தேவைகளுக்கு அமைய இந்தத் தொகை பின்னர் மீளச் சரிசெய்யப்படலாம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025-26 டெண்டர் நிபந்தனைகளின்படி, கப்பலில் ஏற்றப்பட்ட பின்னர், Bill of Lading இல் குறிப்பிடப்பட்ட அளவு, ஏற்றுமதி துறைமுகத்தின் தர அறிக்கைகள் மற்றும் தேவையான ஆவணங்களின் அடிப்படையில் மொத்தத் தொகையில் 80%ஐ வழங்குநருக்கு செலுத்த LCC இணங்கியிருந்தது. மீதமுள்ள 20% தொகை புத்தளம் துறைமுகத்தில் நிலக்கரி இறக்கப்பட்ட பின்னர், அதன் இறுதி அளவு மற்றும் தரம் உறுதி செய்யப்பட்டதன் பின்னர் செலுத்தப்பட வேண்டியதாக இருந்தது.




