இலங்கை பொலிஸின் பத்தரமுல்லை, சுஹுருபாய கட்டிடத்தின் 17ஆவது மாடியில் அமைந்துள்ள பொலிஸ் தடையகற்றல் பிரிவினால் பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
விண்ணப்பங்களை சமர்ப்பித்தல், பின்னணி அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் தடையகற்றல் சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட செயற்பாடுகள் கணினிமயமாக்கப்பட்ட தரவு முறைமையின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், குறித்த முறைமை 2026 ஆகஸ்ட் 20ஆம் திகதி நண்பகல் முதல் செயலிழந்துள்ளது.
முறைமை மீண்டும் செயற்படும் வரை, பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk இற்குச் சென்று “Download Application”என்பதைத் தெரிவுசெய்து உரிய விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டின் பிரதிகளை இணைத்து clear.application@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
இந்தத் தற்காலிக முறையின் ஊடாக கிடைக்கும் விண்ணப்பங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களிடமிருந்து தேவையான பின்னணி அறிக்கைகளைப் பெற்றுக்கொள்ள பொலிஸ் தடையகற்றல் பிரிவு நடவடிக்கை எடுக்கும். கணினிமயமாக்கப்பட்ட முறைமை மீண்டும் செயற்பாட்டுக்கு வந்ததும் உரிய தடையகற்றல் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இந்த நிலையில் எந்தவொரு கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. எனினும், இந்தத் தற்காலிக முறையின் ஊடாக விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் முறைமை மீண்டும் செயற்பாட்டுக்கு வந்த பின்னர் உரிய கட்டணத்தைச் செலுத்தி, இணையவழி முறைமையின் ஊடாக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தடையகற்றல் சான்றிதழ்களை வழங்கக்கூடிய விண்ணப்பதாரர்களின் குறிப்பு இலக்கங்கள் இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
குறிப்பு இலக்கங்கள் வெளியிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் பத்தரமுல்லை சுஹுருபாய கட்டிடத்தின் 17ஆவது மாடியில் அமைந்துள்ள பொலிஸ் தடையகற்றல் பிரிவுக்குச் சென்று தமது சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
குறிப்பு இலக்கங்கள் இணையத்தளத்தில் வெளியிடப்படாத விண்ணப்பதாரர்களுக்கு, கணினிமயமாக்கப்பட்ட முறைமை மீண்டும் செயற்பாட்டுக்கு வந்த பின்னர் தடையகற்றல் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
முறைமையை விரைவில் மீளச் செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முறைமை மீண்டும் செயற்பாட்டுக்கு வந்ததும் பொதுமக்களுக்கு உடனடியாக அறிவிக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.




