களனி கங்கையிலிருந்து நீர் பெறப்படும் இடத்தை அண்மித்த பகுதியில் நீரின் தரத்தை பாதிக்கக்கூடிய அவசர நிலை ஏற்பட்டுள்ளதால், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்ததாவது, இன்று (25) அதிகாலை முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகிக்கும் அம்பத்தலை மற்றும் களனி தெற்கு கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
களனி கங்கையிலிருந்து நீர் பெறப்படும் இடத்தை அண்மித்த பகுதியில் நீரின் தரத்தை பாதிக்கக்கூடிய அவசர நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வழங்கிய அறிவிப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிலைமை தொடர்பான தேவையான பரிசோதனைகள் மற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், நீர் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பாவனையாளர்களின் சுகாதாரப் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




