இலங்கையின் கடல் எல்லையில் கனிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கான புதிய உரிமங்களை வழங்கும் வேலைத்திட்டம் இன்று (25) ஆரம்பிக்கப்படுவதாக இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையின் கனிய எண்ணெய் வளங்களை ஆய்வு செய்து அபிவிருத்தி செய்வதற்காக சர்வதேச எரிசக்தி நிறுவனங்களுக்கு ஏலம் கோரப்படவுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஆய்வு செய்து உற்பத்தி செய்வதற்காக உலகளாவிய எரிசக்தி நிறுவனங்களை ஈர்ப்பதே இந்த ஏல நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், இலங்கையின் மேற்கு கடற்கரைக்கு அப்பால் வர்த்தக ரீதியாக வெற்றிகரமாக அபிவிருத்தி செய்யக்கூடிய இயற்கை எரிவாயு வளங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளங்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன் தொழில்துறை வளர்ச்சிக்கும் பங்களிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உரிமம் வழங்கும் செயல்முறை தொடர்பான மேலதிக தகவல்கள் இன்று நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்படவுள்ளன.
இலங்கையில் எண்ணெய் ஆய்வுகள் 1960களின் பிற்பகுதி வரை செல்கின்றன. 2011ஆம் ஆண்டு கெய்ர்ன் லங்கா நிறுவனம் மன்னார் படுகையில் இரண்டு கிணறுகளைத் தோண்டி ‘பரக்கூடா’ மற்றும் ‘டொராடோ’ பகுதிகளில் இயற்கை எரிவாயுவைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது.
மன்னார் படுகையில் நான்கு தொகுதிகளில் ஆய்வு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முதலீட்டு முன்மொழிவுகளை கோருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அமைச்சரவை அனுமதி 2025 மே மாதம் பெறப்பட்டிருந்தது.
முன்னதாக நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக இந்த செயல்முறை தாமதமடைந்திருந்த போதிலும், அண்மைய தகவல்களின்படி சட்டரீதியான தடைகள் நீக்கப்பட்டுள்ளதால் சர்வதேச ஏல நடவடிக்கையை முன்னெடுக்க அதிகாரிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
2021ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க பெட்ரோலிய வளங்கள் சட்டத்தின் மூலம் பெட்ரோலிய ஆய்வு மற்றும் உற்பத்திக்கான சட்டரீதியான கட்டமைப்பையும் இலங்கை உருவாக்கியுள்ளது.
மேலும், உள்நாட்டு தேவையை அதிகரிப்பதற்கும் கடற்பரப்பில் காணப்படும் எரிவாயு வளங்களை வர்த்தகமயமாக்குவதற்கும் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் 2020ஆம் ஆண்டு இயற்கை எரிவாயு தொடர்பான தேசிய கொள்கையும் வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டது.
2021ஆம் ஆண்டு நாடாளுமன்ற மதிப்பீட்டின்படி, மன்னார் படுகையில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களின் சாத்தியமான மதிப்பு சுமார் 267 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இது வணிக ரீதியாக உறுதியாக பிரித்தெடுக்கக்கூடிய கையிருப்புகளின் மதிப்பு அல்ல என்பதும், வளங்களின் ஒட்டுமொத்த சாத்தியக்கூறை பிரதிபலிக்கும் மதிப்பீடு என்பதும் குறிப்பிடத்தக்கது.




