சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) தற்போது நடைமுறையில் உள்ள நான்கு வருட திட்டத்தை 2027ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்குள் நிறைவு செய்ய இலங்கை எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ள நிலையிலும், IMF திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் பொருளாதார மறுசீரமைப்புகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Bloomberg Television இன் ‘The Asia Trade’ நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில், IMF திட்டத்தின் அடுத்த மீளாய்வு இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அந்த மீளாய்வும் வெற்றிகரமாக நிறைவடைந்ததன் பின்னர், 2027ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்குள் நான்கு வருட விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தை நிறைவு செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை தொடர்பில் IMF நிறைவேற்று சபை கடந்த மே மாதம் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை ஒருங்கிணைத்து நிறைவு செய்ததுடன், அதன் கீழ் இலங்கைக்கு சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இதன்படி, IMF திட்டத்தின் கீழ் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
2022ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதில் IMF திட்டம் முக்கிய பங்காற்றியுள்ளது. இதன் கீழ் அரச நிதி, நாணயக் கொள்கை, நிர்வாக நடைமுறைகள் மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உலகளாவிய பொருளாதார சூழலில் காணப்படும் சவால்களுக்கு மத்தியிலும் IMF திட்டத்தின் கீழான மறுசீரமைப்புகள் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.




