நாடு முழுவதும் உள்ள 16 மின்சார பரிமாற்ற துணை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ள வர்த்தக மட்டத்திலான பேட்டரி மின்சக்தி சேமிப்பு கட்டமைப்புகளின் நிர்மாணப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த பேட்டரி கட்டமைப்புகள் மே மற்றும் ஜூன் மாதங்களில் மூன்று சந்தர்ப்பங்களில் கொழும்பு துறைமுகம் ஊடாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அனுராதபுரம் துணை நிலையத்திற்கு அருகில் தனியார் நிறுவனமொன்றினால் நிர்மாணிக்கப்படும் பேட்டரி மின்சக்தி சேமிப்பு திட்டத்தின் பணிகள் சுமார் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
பகல் நேரங்களில் சூரிய மின்சக்தி கட்டமைப்புகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மேலதிக மின்சாரம் இந்த பேட்டரி கட்டமைப்புகளில் சேமிக்கப்படும். பின்னர் இரவு நேரங்களில் தேவைக்கு ஏற்ப தேசிய மின்சார கட்டமைப்பிற்கு மீண்டும் வழங்கப்படவுள்ளது.
இதன் மூலம் தேசிய மின்சார கட்டமைப்பின் நிலைத்தன்மையை பேணுவதுடன், இரவு நேரங்களில் டீசல் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவையும் குறைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு பேட்டரி மின்சக்தி சேமிப்பு திட்டத்தின் ஊடாகவும் 10 மெகாவோட் மின்சார திறனை தேசிய கட்டமைப்பிற்கு வழங்க முடியும். கட்டுப்பாடு மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகளை எரிசக்தி அமைச்சின் கீழுள்ள National System Operator Ltd. (NSO) நிறுவனம் முன்னெடுக்கவுள்ளது.
பேட்டரி கட்டமைப்புகளின் பராமரிப்புப் பணிகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்படவுள்ளதுடன், சுற்றுச்சூழலுக்கு குறைந்த தாக்கத்துடன் நிலையான மின்சார விநியோகத்தை வழங்குவதே இந்த திட்டங்களின் நோக்கமாகும்.
இந்த திட்டங்களின் மூலம் கிடைக்கும் நன்மைகளை எதிர்காலத்தில் நுகர்வோருக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 23 துணை நிலையங்களில் பேட்டரி மின்சக்தி சேமிப்பு கட்டமைப்புகளை நிறுவுவதற்கான தேவையான கொள்முதல் நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த கட்டமைப்புகளில் சேமிக்கப்படும் மின்சாரத்தை தேவைக்கேற்ப தேசிய மின்சார கட்டமைப்பிற்கு வழங்கும் நடவடிக்கைகளை செப்டம்பர் மாத ஆரம்பத்தில் தொடங்க முடியும் என திட்ட நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




