மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள முதலீட்டு முன்மொழிவுகளில் சீன மற்றும் இந்திய நிறுவனங்களின் முன்மொழிவுகளும் உள்ளடங்குவதாக துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
மத்தள விமான நிலையத்தை இயக்குவதற்கான பொருத்தமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து விருப்ப வெளிப்பாடுகளை (Expressions of Interest – EoI) பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவொன்றும் செயற்பட்டு வருகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் சீனாவிடமிருந்து பெறப்பட்ட சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மத்தள விமான நிலையம் 2013ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
முதலில் முதலீட்டு முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி ஜூன் 8 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்தக் கால அவகாசம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டது.
இதனையடுத்து மொத்தம் 19 முதலீட்டு முன்மொழிவுகள் கிடைத்துள்ளதுடன், அவை தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன.
கிடைத்துள்ள முன்மொழிவுகளில் சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் உள்ளனவா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அனுர கருணாதிலக, அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், ஓமானிலிருந்தும் முதலீட்டு முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.




