சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்த ஐந்து நிறுவனங்கள் 2024ஆம் ஆண்டுக்கான நிலுவை வரியாக 2,891 மில்லியன் ரூபாயை செலுத்த வேண்டியுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர நேற்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த நிலுவை வரித் தொகையில் 2,723 மில்லியன் ரூபாய் பெறுமதி சேர் வரி (VAT) என்றும், 168 மில்லியன் ரூபாய் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
குறித்த ஐந்து நிறுவனங்களுக்கும் வரி மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அவை தொடர்பில் அந்த நிறுவனங்கள் மேன்முறையீடுகளை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். எனினும், எந்தவொரு நிறுவனத்திற்கும் குறித்த வரிகள் தொடர்பில் சலுகை வழங்கப்படவில்லை எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை, குறித்த ஆறு நிறுவனங்களில் ஒரு நிறுவனம் 2024ஆம் ஆண்டுக்கான பெறுமதி சேர் வரியாக 2,429 மில்லியன் ரூபாயையும், சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியாக 434 மில்லியன் ரூபாயையும் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்கு 9,700 மில்லியன் ரூபாய் நிலுவை வரியாக செலுத்த வேண்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியதுடன், இவ்வளவு காலம் வரி அறவிடப்படாமை சந்தேகத்திற்குரியதாகும் என்றும் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர், குறித்த நிறுவனங்கள் மேன்முறையீடுகளை முன்வைத்துள்ளமையே வரி அறவீட்டில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான காரணம் என தெரிவித்தார்.
மேலும், மேன்முறையீடுகள் விசாரிக்கப்பட்டு முடியும் வரை நிலுவை வரிகளை அறவிடுவது சிரமமாக உள்ளதாகவும், சில நிறுவனங்கள் தமது நிறுவனங்களில் உற்பத்தி நடவடிக்கைகள் இடம்பெறவில்லை எனக் கூறி வாதங்களை முன்வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் கருத்தும் கோரப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.




