2022ஆம் ஆண்டு நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாட்டரிசிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலையான 220 ரூபாயை விட அதிகமாக, சிவப்பு நாட்டரிசி ஒரு கிலோகிராம் 225 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வதற்காக சந்தைக்கு விநியோகித்தமை தொடர்பில் பொலன்னறுவையைச் சேர்ந்த ‘நியூ ரத்னா ரைஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்திற்கும் அதன் பணிப்பாளர்களுக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 06ஆம் திகதி இந்த வழக்கு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதன்போது, குறித்த குற்றச்சாட்டில் ‘நியூ ரத்னா ரைஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தை குற்றவாளியாகக் காண பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் உத்தரவுகளை மீறியமைக்காக குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனத்திற்கு ஒரு மில்லியன் ரூபாய் (10 இலட்சம் ரூபாய்) அபராதம் விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.




