தாய்லாந்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாங்கொக்கின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள டெப்சிரின் நோந்தபுரி பாடசாலையில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 14 வயது மாணவன், தாக்குதலின் பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மாணவனின் குடும்ப உறுப்பினர் ஒருவருடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.




