அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானாகவே குடியுரிமை வழங்கும் “Birthright Citizenship” கொள்கைக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் முயற்சியை மீண்டும் ஆரம்பித்து, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரண்டு புதிய நிறைவேற்று உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.
பிறப்பின் மூலம் வழங்கப்படும் குடியுரிமையை கட்டுப்படுத்துவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முந்தைய முயற்சியை அமெரிக்க உயர் நீதிமன்றம் நிராகரித்த சில வாரங்களுக்குப் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புதிய உத்தரவுகளின் கீழ், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளின் உறுப்பினர்கள், வெளிநாட்டு அரசாங்க ஊழியர்கள், மோசடியான முறையில் குடியுரிமை பெற முயற்சித்தவர்கள் மற்றும் சட்டப்படி குடியுரிமை வழங்கப்படாத சில அமெரிக்க பிரதேசங்களில் உள்ளவர்களின் குழந்தைகளுக்கு பிறப்பின் மூலம் குடியுரிமை வழங்குவதை கட்டுப்படுத்தும் வகையில் புதிய வரையறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், சுற்றுலா விசா மூலம் அமெரிக்காவிற்கு வந்து குழந்தைகளைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு அமெரிக்க குடியுரிமையை பெற்றுக்கொடுக்கும் “Birth Tourism” நடைமுறையை தடை செய்யும் உத்தரவையும் ட்ரம்ப் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையின் குடியுரிமையை நிறைவேற்று உத்தரவின் மூலம் நீக்குவது அரசியலமைப்புச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த உத்தரவுகள் நீதிமன்றங்களில் சட்ட சவால்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




