முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 600 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சட்டவிரோத சொத்து வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 20 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கின் விசாரணைகளில், முன்னாள் அமைச்சர் தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பெற்றதாகக் கூறப்படும் சொத்துக்கள் தொடர்பான பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
2010 மார்ச் 31 முதல் 2012 மார்ச் 31 வரை தொழில் மற்றும் மக்கள் தொடர்புகள் அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில், சட்டபூர்வ வருமானத்தின் மூலம் விளக்க முடியாத அளவிலான சொத்துக்களை பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விசாரணைகளின் போது அவரது வங்கிக் கணக்குகள், நிலையான வைப்புகள், சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் ஏனைய நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன.
கொழும்பு 07 கறுவாத்தோட்டம், ராஜகிரிய மற்றும் கடவத்தை போன்ற பகுதிகளில் அதிக பெறுமதியான காணிகள் கொள்வனவு செய்தமை, சொகுசு வாகனங்கள் வாங்கியமை மற்றும் பாரிய நிதி பரிவர்த்தனைகள் மேற்கொண்டமை தொடர்பான தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
எதிர்வரும் வழக்கு விசாரணையில் வங்கி முகாமையாளர்கள் உள்ளிட்ட சாட்சியாளர்கள் கணக்குகள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை முன்வைக்கவுள்ளனர்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் உதவி பணிப்பாளர் அமா விஜயசிங்க வழக்கை முன்னெடுத்து வருகின்றார்.




