சீன பிரஜையொருவருக்குச் சொந்தமான ரூபாய் 20 மில்லியன் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன நேற்று (27) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபர் ஒருவருக்கு தலா ரூபாய் 20 மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் அவர்களை விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், அவர்களுக்கு வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்துள்ளார்.
கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மகன் அனுத ஜனதித் சமரகோன் பண்டார, அஜித் பிரியந்த, துஷான் ஷ்யாமல், பிரமில் குசல் குணதாச மற்றும் வங் குவின் (Wan Quin) என்ற சீன பிரஜையும் அடங்குகின்றனர்.
சந்தேகநபர்கள் இதற்கு முன்னரும் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டுள்ளனரா என்பதை கண்டறியும் வகையில் அவர்களின் தொலைபேசி பதிவுகள், வங்கி கணக்கு பரிவர்த்தனைகள் மற்றும் கிரிப்டோகரன்சி கணக்குகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபரையும், கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் வாகனத்தையும் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் ரூபாய் 20 மில்லியன் தொடர்பில் முறைப்பாடு செய்த சீன பிரஜை தற்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த பணத்தை அவர் எவ்வாறு சம்பாதித்தார் என்பது தொடர்பிலும் பொலிஸார் தனியான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




