இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் தான் நாடாளுமன்றத்தில் இருந்து விலகக்கூடும் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
“நான் இன்னும் நீண்ட காலம் இந்த நாடாளுமன்றத்தில் இருக்கப் போவதில்லை. உங்களுக்கு நீண்ட காலம் தொந்தரவு கொடுக்க மாட்டேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஒன்றில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்த பின்னர் தனக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் சம்பவங்கள் தொடர்பில் ஆதாரங்கள் மற்றும் முறைப்பாடுகளை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சரிடம் வழங்கிய போதிலும் இதுவரை எந்தவொரு விசாரணையும் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பிலும் முறையான விசாரணை நடத்தப்படவில்லை எனவும், இது குறித்து குரல் எழுப்பியதால் தனக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.




