2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக 10 விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது, அமெரிக்க டொலர் 2 மில்லியன் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணைகளை தீவிரப்படுத்தும் வகையில், இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் குழுவொன்று நேற்று (20) அவுஸ்திரேலியாவுக்கு பயணித்துள்ளது.
இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம், இரண்டாவது சந்தேகநபரான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகநபரான ஷமீந்திர ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக சர்வதேச சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தல், வங்கி கணக்கு தொடர்பான விசாரணைகள் நடத்தல் மற்றும் சாட்சியங்களைப் பதிவு செய்தலாகும்.
இலஞ்சப் பணம் வைப்பு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வங்கி கணக்கின் உரிமையாளரிடமிருந்து வாக்குமூலம் பெறப்படவுள்ளதுடன், இரண்டாவது சந்தேகநபரின் அவுஸ்திரேலிய வங்கி கணக்குகளைப் பரிசோதிக்க தேவையான நீதிமன்ற அனுமதியும் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முதல் சந்தேகநபரான முன்னாள் ஸ்ரீலங்கன் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது மரணம் தொடர்பான விசாரணையும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.




