குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பில் போதுமான எச்சரிக்கைகளை பொதுமக்களுக்கு வழங்கவில்லை என குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநில நீதிமன்றம் சமூக ஊடக நிறுவனமான மெட்டாவுக்கு மேலும் 567 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
நியூ மெக்சிகோ மாவட்ட நீதிபதி Bryan Biedscheid, மெட்டா நிறுவனம் “public nuisance” எனப்படும் பொதுத் தொல்லையாக மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எதிர்கால பாதிப்புகளை குறைப்பதற்காக சிறப்பு நிதியமொன்றை உருவாக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இதற்கு முன்னர் மெட்டா நிறுவனத்திற்கு 375 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மொத்த அபராதத் தொகை தற்போது 942 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.
நீதிபதி தனது தீர்ப்பில் மெட்டா நிறுவனத்தின் தளங்களை ஒரு தொழிற்சாலையுடன் ஒப்பிட்டு, அதன் விளம்பரங்கள் மற்றும் உள்ளடக்கங்கள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோக அபாயங்களை சமூகத்திற்கு ஏற்படும் மாசுபாடு என குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பை நிராகரித்துள்ள மெட்டா நிறுவனம், மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. தனது தளங்களில் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு நியூ மெக்சிகோ மாநிலம் தாக்கல் செய்த வழக்கில், மெட்டாவின் பரிந்துரை அல்கோரிதம்கள் இளம் பயனர்களை தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் மற்றும் பாலியல் குற்றவாளிகளிடம் கொண்டு சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது.




