பெண்கள் மற்றும் சிறுமிகளின் புகைப்படங்களை அவர்களின் அனுமதியின்றி பாலியல் ரீதியான மற்றும் அவதூறான கருத்துகளுடன் போலிக் கணக்குகள் மூலம் முகநூலில் பகிர்வோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, இவ்வாறான முகநூல் கணக்குகளை நடத்துபவர்கள் மற்றும் அவற்றில் பங்கேற்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் தனது சட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
14,000க்கும் மேற்பட்ட முகநூல் கணக்குகளில் பெண்களின் புகைப்படங்கள் பாலியல் தூண்டல் கருத்துகளுடன் பகிரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலர் இப்புகைப்படங்களை பணத்துக்காக விற்பனை செய்வதாகவும், புகைப்படங்களில் உள்ள பெண்கள் பாலியல் உறவுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் தரங்கனி விக்கிரமசிங்க, குறித்த முகநூல் கணக்குகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மேலதிக சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கணினி அவசரகால பதிலளிப்பு பிரிவு, டிக்டொக் மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து இவ்வாறான உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், முகநூல் கணக்குகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மெட்டா நிறுவனம் இவ்வாறான போலிக் கணக்குகளின் விவரங்களை பொலிஸாருக்கு வழங்க ஒத்துழைத்து வருவதாக கணினி அவசரகால பதிலளிப்பு பிரிவின் பொறியாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.
தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சின் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக விசாரணைப் பிரிவு மற்றும் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆகியன இணைந்து இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.




