தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் மீது இன்று காலை குளவிகள் தாக்குதல் நடத்தியதில் 16 பெண்கள் உள்ளிட்ட 17 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த 16 பெண் தோட்டத் தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளரும் சிகிச்சைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜா தோட்டத்தின் மேற்பிரிவில் உள்ள 7ஆம் தேயிலைத் தோட்டப் பகுதியில் மரம் ஒன்றிலும் பாறை ஒன்றிலும் கட்டப்பட்டிருந்த குளவி கூடு கலைந்ததையடுத்து, அருகில் பணியாற்றிக் கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் மீது குளவிகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
குளவி தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்களை மீட்பதற்காக புகையை உருவாக்கி குளவிகளை விரட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதிலும், அந்தப் புகையை ஏற்படுத்தியவர்களையும் குளவிகள் தாக்கியதாக தாக்குதலுக்கு உள்ளான தோட்டத் தொழிலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.




