கொவிட்-19 தொற்றுநோய் காலத்தில் தவறான தகவல்களை பரப்பியதாகவும், உண்மையான தகவல்களை பொதுமக்களிடம் இருந்து மறைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் முன்னாள் முக்கிய சுகாதார அதிகாரியான வைத்தியர் அந்தோனி ஃபௌசி அமெரிக்க செனட் சபையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கொவிட்-19 வைரஸின் தோற்றம் தொடர்பாக அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்ட போதிலும், அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த ஃபௌசி, முரண்பாடான பதில்களை உருவாக்கி பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தன்னை குற்றவாளியாக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைக்கு தலைமை தாங்கிய குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர் ராண்ட் பால், தன்னை சிறையில் அடைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த விசாரணை நடத்தப்படுவதாகவும், அவர் தனிப்பட்ட விரோதத்துடன் செயல்படுவதாகவும் ஃபௌசி குற்றம் சாட்டியுள்ளார்.
தொற்றுநோய் தொடர்பான தகவல்களை பொதுமக்களிடம் இருந்து மறைத்ததாகவும், அதன் ஆபத்து குறித்து தவறான தகவல்களை வழங்கியதாகவும் குடியரசுக் கட்சியினர் நீண்டகாலமாக ஃபௌசி மீது குற்றம் சாட்டி வருகின்றனர். எனினும், இந்த குற்றச்சாட்டுகளை அவர் முற்றாக மறுத்துள்ளார்.
கொவிட் வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வகத்திலிருந்து வெளியேறியதாக தான் ஆரம்பம் முதலே கூறி வந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளதுடன், ஃபௌசியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
எனினும், உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவிப்பதன்படி, கொவிட் வைரஸ் விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவிய இயற்கையான தோற்றம் தொடர்பான ஆதாரங்கள் அதிகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், செனட் உறுப்பினர் ராண்ட் பால், ஃபௌசியின் தொற்றுநோய் கால குறிப்பேடுகளில் சிலவற்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த குறிப்புகளில், வைரஸ் இயற்கையாக உருவானதாக நம்பியிருந்தாலும், ஆய்வகத்திலிருந்து வெளியேறியிருக்கக்கூடிய சாத்தியக்கூறு தொடர்பிலும் ஆரம்ப கட்டத்தில் திறந்த மனதுடன் பரிசீலித்திருந்ததாக தெரியவந்துள்ளது.
ஃபௌசிக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




