செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து அதில் தீப்பற்றியுள்ளதாகவும், அதில் இருந்த பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் சவுதி அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலுக்கான பொறுப்பை யேமனின் அன்சார் அல்லாஹ் எனப்படும் ஹூதி அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.
சவுதி அரேபியாவுக்கு எதிராக ஹூதி அமைப்பு அறிவித்துள்ள கடல் தடையின் பின்னணியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதற்கிடையில், உலகின் முக்கிய எரிசக்தி போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான பாப் அல்-மந்தப் நீரிணைக்கும் தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியும் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடல் கண்காணிப்பு தரவுகளின்படி, சவுதி அரேபிய எண்ணெய் பீப்பாய்கள் 40 இலட்சம் அளவை ஏற்றிச் செல்லும் இரண்டு சீன எண்ணெய் கப்பல்கள் பாப் அல்-மந்தப் வழியாக செங்கடலை விட்டு வெளியேற பயணித்து வருகின்றன.
ஹூதி அமைப்பு அறிவித்துள்ள கடல் தடையை எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்துகிறது என்பதை சோதிக்கும் முக்கிய நிகழ்வாக இந்த கப்பல்களின் பயணம் கருதப்படுகிறது.
இதற்கு முன்னரும் சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹூதி அமைப்பு தெரிவித்திருந்தது.




