கிழங்கு மற்றும் காய்கறி பயிர்களுக்கான புதிய காப்புறுதி திட்டம் ஒன்றை விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதி சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைக்கோஸ், கரட், லீக்ஸ், கத்தரிக்காய், வெண்டைக்காய், பீன்ஸ், மிளகாய், தக்காளி, பாகற்காய் மற்றும் பூசணிக்காய் உள்ளிட்ட விவசாய திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள் இந்த காப்புறுதி திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுகின்றன.
அடிப்படை காப்புறுதி தொகையில் 7 சதவீதத்தை பிரீமியமாக செலுத்துவதன் மூலம் இந்த காப்புறுதி பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியும்.
இயற்கை அனர்த்தங்கள், கட்டுப்படுத்த முடியாத தாவர நோய்கள் மற்றும் பூச்சி தாக்குதல்கள், காட்டு யானைகளினால் ஏற்படும் சேதங்கள் ஆகியவற்றுக்காக விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் மூலம் இழப்பீடு வழங்கப்படும்.
அபாயங்களை நிர்வகிப்பதன் மூலம் விவசாயிகளை தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபடச் செய்வதே இந்த காப்புறுதி திட்டத்தின் முக்கிய நோக்கம் என விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.




