இலங்கைக்கான அமெரிக்க சுங்கவரி 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த சாதகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை தூதுக்குழு மேற்கொண்ட இலக்குநோக்கிய பேச்சுவார்த்தைகள், தொடர்ச்சியான ஒருங்கிணைப்பு மற்றும் வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தைகளில் நிதிச் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும, இலங்கை மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க, வர்த்தகச் செயலாளர் எம். விமலேந்திரராஜா, பிரதம பொருளாதார ஆலோசகரும் முதலீட்டு சபைத் தலைவருமான துமிந்த ஹுலங்கமுவ மற்றும் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க ஆகியோர் பங்கேற்றனர்.
தனது பதவிக்காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடைவதாகக் குறிப்பிட்ட தூதுவர் மகிந்த சமரசிங்க, இந்த நேர்மறை முடிவை நிலைநிறுத்த தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் இலங்கையால் எதையும் சாதிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.




