SLS தரச்சான்று முத்திரை இல்லாத மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் தலைக்கவசங்கள் (ஹெல்மெட்கள்) உற்பத்தி, இறக்குமதி, விற்பனை மற்றும் விநியோகத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2015 ஜூலை 16 ஆம் தேதி வெளியிடப்பட்ட 1923/65 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பின் 59 ஆம் இலக்க உத்தரவின்படி, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்களும் SLS 517 தரச்சான்று முத்திரையை கட்டாயமாகக் கொண்டிருக்க வேண்டும்.
கடந்த ஜூலை 27 நடைபெற்ற விசேட சோதனை நடவடிக்கைகளில் 98 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, SLS முத்திரையற்ற 431 ஹெல்மெட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், SLS அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படாத நிலையில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட 3,520 ஹெல்மெட்களின் விற்பனை இரண்டு தொழிற்சாலைகளில் தடை செய்யப்பட்டது.
2026 ஜனவரி முதல் ஜூன் வரை 53 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு 87 ஹெல்மெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றில் 39 வழக்குகள் நிறைவடைந்துள்ளதுடன், மேலும் 14 வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.
2026 ஆம் ஆண்டில் இதுவரை SLS முத்திரையற்ற ஹெல்மெட்கள் தொடர்பாக மொத்தம் 151 சோதனைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 4,038க்கும் அதிகமான சட்டவிரோத ஹெல்மெட்கள் கைப்பற்றப்பட்டோ அல்லது அவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டோ உள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.




