பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணை இன்றி சுமார் 15 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையின்றி இத்தகைய நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பிணை வழங்குவதற்கான "விசேட சூழ்நிலை" என நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
நீண்டகாலமாக விசாரணையில் உள்ள பயங்கரவாத வழக்கின் மூன்றாவது குற்றஞ்சாட்டப்பட்ட தம்பையா பிரகாஷ் எனப்படும் தனுஷுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய பிணை மறுப்பு உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் பி. குமாரரத்னம் ஆகியோர் இந்தத் தீர்ப்பை வழங்கினர்.
குறித்த நபர் 2009 ஆகஸ்டில் கைது செய்யப்பட்டு, 2012 செப்டம்பரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகால விதிமுறைகளின் கீழ் 230 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. வழக்கில் 106 சாட்சிகள் பெயரிடப்பட்டுள்ளனர்.
ரூ.200,000 ரொக்கப் பிணை, தலா ரூ.5 மில்லியன் மதிப்புள்ள நான்கு சரீரப் பிணையாளர்கள், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விசாரணைப் பிரிவில் ஆஜராகுதல், கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தல் உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளின் கீழ் பிணை வழங்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு PTA-வில் சேர்க்கப்பட்ட 15B பிரிவின் நோக்கத்தை கீழ்நீதிமன்றம் உரிய முறையில் பரிசீலிக்கவில்லை என்றும், நீண்டகால சிறைவாசம் குற்றஞ்சாட்டப்பட்டவரின் குடும்பத்தையும் கடுமையாக பாதித்துள்ளதாகவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.




