இந்தியாவின் கேரள கடற்கரைக்கு அப்பால் மூழ்கிய ‘MSC Elsa 3’ கப்பலில் இருந்து கடலில் கலந்த பிளாஸ்டிக் பெலட்டுகள் (பிளாஸ்டிக் துகள்கள்) அடங்கிய 43க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் இதுவரை அகற்றப்பட்டுள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண தீவுகள் முதல் காலி வரையிலான கடற்கரை பகுதிகளில் இந்த பிளாஸ்டிக் துகள்கள் தொடர்ந்து கரையொதுங்கி வருவதாகவும், பருவமழை காலநிலை காரணமாக நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளதாகவும் அதிகாரசபையின் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்தார்.
இந்த பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணிகளில் சுமார் 1,800 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட கப்பல் நிறுவனம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.
இதேவேளை, கப்பல் மூழ்கியதால் இலங்கையின் கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான இழப்பீட்டுத் தொகையை மதிப்பிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவும் நேற்று கூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைபீரியக் கொடியின் கீழ் பயணித்த ‘MSC Elsa 3’ என்ற கொள்கலன் கப்பல், இந்தியாவின் கேரள கடற்கரையிலிருந்து சுமார் 38 கடல் மைல் தொலைவில் நீர் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து 2025 மே 25 அன்று மூழ்கியது. விபத்து ஏற்பட்ட போது கப்பலில் 643 கொள்கலன்கள் இருந்தன.




