முக்கியச் செய்தி
Island edition
··
LankaNews
உள்ளூர்

அதிக சத்தத்திற்கு இனி சட்ட நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கை

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கிகளை பயன்படுத்தும்போது சட்டத்தை கடைப்பிடிக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். அமைதியான வாழ்க்கை, அன்றாட நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் சுற்ற…

By Site Administrator3 நிமிட வாசிப்பு
அதிக சத்தத்திற்கு இனி சட்ட நடவடிக்கை – பொலிஸார் எச்சரிக்கை

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கிகளை பயன்படுத்தும்போது சட்டத்தை கடைப்பிடிக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அமைதியான வாழ்க்கை, அன்றாட நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார குடியிருப்பாளர்களின் நலனுக்கு இடையூறு, அசௌகரியம் அல்லது மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள், ஒலி பெருக்கிகள் மற்றும் ஏனைய ஒலி சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுகள், இலங்கை பொலிஸாரால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை கடுமையாக பின்பற்றுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதிகப்படியான ஒலி மாசுபாடு தற்போது சுற்றுச்சூழல் பிரச்சினையாக மட்டுமன்றி, குறிப்பாக குழந்தைகள், பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் மற்றும் உளநலத்தை பாதிக்கும் தீவிர பிரச்சினையாகவும் மாறியுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் 38/2005ஆம் இலக்க வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவின்படி, ஒலிபெருக்கிகள் அல்லது ஏனைய ஒலி சாதனங்களின் பயன்பாடு பொதுமக்கள் அல்லது சுற்றுவட்டார குடியிருப்பாளர்களுக்கு அசௌகரியம், இடையூறு அல்லது மன உளைச்சலை ஏற்படுத்தினால், குற்றவியல் சட்டத்தின் 261ஆம் பிரிவின் கீழ் பொது இடையூறாக கருதி சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது.

ஒலிபெருக்கி பயன்பாட்டுக்கான அனுமதி

பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்குவது தொடர்பில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

அதன்படி, இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கான அனுமதி பொதுவாக வழங்கப்படக்கூடாது. எனினும், மத நடவடிக்கைகள் அல்லது விசேட நிகழ்வுகளுக்காக, சம்பந்தப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் நிபந்தனைகளை கருத்திற்கொண்டு சட்டத்திற்கு அமைவாக அனுமதி வழங்கப்படலாம்.

அனுமதி வழங்கப்பட்டிருந்தால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள திகதி, நேரம் மற்றும் ஏனைய அனைத்து நிபந்தனைகளும் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும்.

பொலிஸ் அனுமதி கிடைத்திருந்தால் அனுமதிக்கப்படும் நேரங்கள்

  • திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை – இரவு 10.00 மணி வரை

  • வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை – அதிகாலை 1.00 மணி வரை

  • ஞாயிற்றுக்கிழமை – அதிகாலை 12.30 மணி வரை

இந்த நேர வரம்புகள் அனுமதி பெற்றவர்களுக்கு தானாக வழங்கப்படும் உரிமையாக கருதப்படாது. சம்பந்தப்பட்ட நிகழ்வு அல்லது சந்தர்ப்பத்திற்காக பொலிஸாரால் வழங்கப்பட்ட அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு அமைவாக மட்டுமே ஒலிபெருக்கிகளை பயன்படுத்த முடியும்.

அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட வளாகத்திற்கு வெளியே அதிகளவு ஒலி பரவி, அயலவர்கள் அல்லது பொதுமக்களுக்கு தொல்லை, இடையூறு அல்லது அசௌகரியம் ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகளை இயக்கக்கூடாது.

காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையான விசேட நிகழ்வுகளுக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், ஒலியின் அளவு உரிய முறையில் கட்டுப்படுத்தப்பட்டு, இயன்றவரை சம்பந்தப்பட்ட வளாகத்திற்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

அனுமதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க தேவையான பொலிஸ் அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து முறைப்பாடு கிடைத்தால், பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை பரிசோதிப்பார்கள். வெளியிடப்படும் ஒலி பொதுமக்கள் அல்லது சுற்றுவட்டார குடியிருப்பாளர்களுக்கு இடையூறு, மன உளைச்சல் அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்துவது உறுதி செய்யப்பட்டால், ஒலி சாதனங்களின் பயன்பாட்டை நிறுத்தவோ அல்லது உரிய முறையில் கட்டுப்படுத்தவோ சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்படும்.

பொலிஸாரின் அறிவுறுத்தல்களையும் மீறி நடவடிக்கை தொடரப்பட்டால், நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களில், சம்பந்தப்பட்ட ஒலி சாதனங்களை பொலிஸ் காவலில் எடுப்பதும் இதில் அடங்கும்.

அதிக சத்தம் அல்லது சட்டவிரோதமான ஒலி, அல்லது பொது இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மற்றும் ஏனைய ஒலி சாதனங்களை பயன்படுத்துவது தொடர்பான சம்பவங்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் அல்லது 118 அல்லது 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஒலிபெருக்கிகள், ஒலி பெருக்கிகள் மற்றும் ஏனைய ஒலி சாதனங்களை பயன்படுத்தும்போது பொதுமக்களின் அமைதி, சௌகரியம், சுதந்திரம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயற்படுவது அனைவரினதும் பொறுப்பு என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

சட்ட விதிமுறைகள் அல்லது ஒலி சாதனங்களை பயன்படுத்துவதற்கான அனுமதியில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறும் எந்தவொரு நபருக்கும் எதிராகவும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஆதாரம்: பொலிஸ் ஊடகப் பிரிவு

பகிர்:

About Site Administrator

Lanka News administrator

தொடர்புடைய கட்டுரைகள்

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்கவும்

முதலில் கருத்து தெரிவிக்கவும்