சுங்க வரியின்றி இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சிகரெட் தொகையுடன் இரண்டு இந்திய பிரஜைகள் இன்று (25) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் குழுவினரால் விமான நிலையத்தின் வருகை முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சுங்க வரியின்றி நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 278 அட்டைப் பெட்டிகளில் அடங்கிய 55,600 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 33 மற்றும் 38 வயதுடைய இந்திய பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.




