அடுத்த மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில், இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற சிறைச்சாலை அமைதியின்மை மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதன்போது, இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தினால் எழுத்துமூல புதுப்பிப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதற்கு இணையாக, இலங்கை அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சமர்ப்பிக்கவுள்ளார்.
கடந்த ஆண்டு, இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டிருந்த கண்காணிப்பு ஆணை 2027 செப்டெம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான முழுமையான அறிக்கை அடுத்த ஆண்டு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால் எழுப்பப்பட்ட பல விடயங்களுக்கு அரசாங்கம் பதிலளித்துள்ளதாகவும், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகத்தை வலுப்படுத்தி, இன, மத வேறுபாடுகளின்றி செயற்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 81ஆவது பொதுச் சபை அமர்வில் பங்கேற்கவுள்ளதுடன், செப்டெம்பர் 26ஆம் திகதி பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார்.
இதேவேளை, தற்போதைய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் பதவிக் காலம் டிசெம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய பொதுச் செயலாளரைத் தெரிவு செய்வதற்கான செயன்முறையும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.




