தெல்கொட, அலுத் நுவர வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் கார் ஒன்றும் மோதியதில் 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 19ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில், பியகம பகுதியில் இருந்து தெல்கொட நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி திடீரென வலதுபுறமாக திரும்ப முற்பட்டபோது, எதிரே வந்த கார் மீது மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, இரு பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் உடுப்பில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் முச்சக்கரவண்டியின் சாரதி, பெண் ஒருவர் மற்றும் 7 வயது சிறுமி ஆகியோர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் தெல்கொட பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஆண் ஒருவரும், சியம்பலாபே பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணும் அவரது 7 வயது மகளும் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
காரில் பயணித்த மற்றுமொரு சிறுமியும் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் மீகஹவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




