முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் பிரித்தானியாவுக்கு மேற்கொண்டதாகக் கூறப்படும் தனிப்பட்ட பயணத்திற்காக அரசாங்க நிதியில் 166 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளில் மேலும் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பயணம் பிரித்தானிய அரசாங்கத்தின் இராஜதந்திர அல்லது உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ பயணம் அல்ல என்பது தொடர்பான தகவல்கள் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன.
அந்தக் காலப்பகுதியில் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்ட அரச தலைவர்களின் பட்டியலை பிரித்தானிய வெளிவிவகாரம், பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் வெளியிட்டுள்ள நிலையில், அதில் ரணில் விக்ரமசிங்கவின் பெயர் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்தபோது 2023 செப்டெம்பர் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்தப் பயணத்திற்காக அரசாங்க நிதியில் 166 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்ததைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க மற்றும் அப்போது அவரது செயலாளராக இருந்த சமன் ஏக்கநாயக்க ஆகியோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணம் தனிப்பட்ட பயணம் அல்ல, உத்தியோகபூர்வ பயணம் என ரணில் விக்ரமசிங்க தரப்பில் வலியுறுத்த முயற்சிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத், இது தொடர்பான அனைத்து தகவல்களையும் நேற்று (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) கையளித்துள்ளார்.
வழக்கின் தற்போதைய நிலை
மக்களின் பணத்தில் 166 இலட்சம் ரூபாய் செலவிட்டு தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ரணில் விக்ரமசிங்க மற்றும் சமன் ஏக்கநாயக்க ஆகியோர் தற்போது பிணையில் உள்ளனர்.
கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, போதுமான சாட்சியங்கள் இருப்பதாகவும், குற்றவியல் வழக்கொன்றின் விசாரணைகள் தாமதமடைவதால் அதன் பெறுமதி குறையக்கூடும் என்பதால் சந்தேகநபர்களுக்கு எதிராக விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
கடந்த ஜூலை 8ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை நிறைவு செய்து கோப்புகளை சட்டமா அதிபரிடம் அனுப்பியுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் திகதியொன்றை வழங்குமாறு சிரேஷ்ட அரச சட்டத்தரணி சமதரி பியசேன நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
இதன்படி, வழக்கை செப்டெம்பர் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.




