உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்காக அரசாங்கம் முன்வைத்துள்ள முன்மொழிவின் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் முன்மொழியப்பட்ட நீதித்துறை அமைப்பு தொடர்பான சட்டத் திருத்தத்தை எதிர்த்து மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான 14 நாள் கால அவகாசம், குறித்த சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நேற்று (18) முதல் ஆரம்பமாகியுள்ளது.
சட்டமூலம் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டு சில மணித்தியாலங்களுக்குள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.
நேற்று மனுக்களைத் தாக்கல் செய்த ஏனைய தரப்பினரில் சுயாதீன சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, சர்வஜன பலய, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் ஆகியோரும் அடங்குகின்றனர்.
இந்த மனுக்களில் சட்டமா அதிபர் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
முன்மொழியப்பட்ட 22ஆவது திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறும், அதனை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டுமன்றி மக்கள் வாக்கெடுப்பிலும் அங்கீகாரம் பெற வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.




