உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் இன்று (18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் (Order Book) இடம்பெற்றுள்ளது.
இந்த சட்டமூலத்தை நீதித்துறை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வு வயது தொடர்பாக 1978ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க நீதித்துறை அமைப்புச் சட்டத்தைத் திருத்துவதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும்.
முன்மொழியப்பட்ட திருத்தத்தின்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 63 இலிருந்து 65 ஆகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
நீதித்துறை அமைப்பில் காணப்படும் தாமதங்களைக் குறைத்தல் மற்றும் அனுபவமிக்க மூத்த நீதிபதிகளின் சேவையை மேலும் பெற்றுக்கொள்வது இந்த முன்மொழியப்பட்ட மாற்றங்களின் நோக்கமாகும்.
எவ்வாறாயினும், அரசாங்கம் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், முன்மொழியப்பட்ட திருத்தம் அரசியல் மற்றும் சட்டத் துறைகளில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலமைப்பின் படி, சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதனை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.
அத்தகைய மனு பரிசீலிக்கப்பட்ட பின்னர், உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை 3 முதல் 21 நாட்களுக்குள் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும்.




