இலங்கை அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கான புதிய தூதுவர்களை நியமித்துள்ளதுடன், இந்த நியமனங்கள் இரு நாடுகளுடனான இலங்கையின் இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்ட வேய் ஹுவாஷியாங் (Wei Huaxiang) ஏற்கனவே நாட்டிற்கு வருகை தந்துள்ளார். இலங்கை போன்ற பழைமையான வரலாறு மற்றும் அழகைக் கொண்ட நாட்டில் பணியாற்றுவது தமக்கு பெரும் கௌரவம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு பாதை ஒரு மண்டலம் (Belt and Road) திட்டத்தின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், இலங்கையில் உள்ள சீன பிரஜைகள் மற்றும் நிறுவனங்களின் நலனுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்ட எரிக் மேயர், வொஷிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் அதிகாரப்பூர்வமாக பதவிப் பிரமாணம் செய்துள்ளார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் பல வருட அனுபவமுள்ள மூத்த இராஜதந்திரியான அவர், எதிர்வரும் நாட்களில் கொழும்புக்கு வருகை தரவுள்ளார்.
இந்நிலையில், BRICS வர்த்தக சபையின் (இலங்கை) பொதுச் செயலாளர் கோசல விக்கிரமநாயக்க, ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சருக்கு விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்காவும், இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார பங்காளியாகவும் கடன் மறுசீரமைப்பின் முக்கிய பங்காளியாகவும் சீனாவும் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், புதிய தூதுவர்கள் வெறும் சம்பிரதாய நிகழ்வுகளுக்கு மட்டுப்படாமல், வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஈர்க்கக்கூடிய வர்த்தக திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.




