உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் பிரதான உயிர்த்த ஞாயிறு வழக்கின் தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
சுமார் ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், முறைப்பாட்டுத் தரப்பின் இறுதி சாட்சியங்கள் நேற்று (11) இரவு நிறைவடைந்ததையடுத்து முறைப்பாட்டுத் தரப்பு வழக்கு முடிவடைந்துள்ளது. இதுவரை சுமார் 245 நாட்கள் முறைப்பாட்டுத் தரப்பு சாட்சியங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையில், நீதிபதிகள் சுஜீவ நிஷங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
முறைப்பாட்டுத் தரப்பு வழக்கு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்து பிரதிவாதிகளின் சாட்சியங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அதன் பின்னர் இரு தரப்பினரும் எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைத்ததைத் தொடர்ந்து தீர்ப்பு வழங்குவதற்கான திகதி நிர்ணயிக்கப்படவுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக 31 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஐந்து வழக்குகள் மூவரடங்கிய மேல் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று வழக்குகளின் தீர்ப்புகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும், மாவனல்லை பகுதியில் ஏழு புத்தர் சிலைகள் மற்றும் ஒரு தேவ சிலைக்கு சேதம் விளைவித்தமை தொடர்பான வழக்கில் 11 பிரதிவாதிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தளம், லக்டோஸ் வத்த பகுதியில் பயங்கரவாத பயிற்சி முகாம் மற்றும் வெடிபொருள் களஞ்சியம் ஒன்றை நடத்திச் சென்றமை தொடர்பான வழக்கும் தற்போது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.
வழக்கு விசாரணையை விரைவுபடுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, வழக்கமான நடைமுறையின் கீழ் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிக காலம் எடுத்திருக்கக்கூடிய இந்த வழக்கு தற்போது தீர்மானகரமான கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




