போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் “ரட்டம ஏகட்ட” தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து இன்று (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் இதுவரை இறுதி முடிவோ அல்லது இணக்கப்பாடோ எட்டப்படவில்லை என தெரிவித்தார்.
“ரட்டம ஏகட்ட” தேசிய செயற்பாட்டு சபையில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சில தரப்பினரால் யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும், அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் இதுவரை இறுதி முடிவோ அல்லது இணக்கப்பாடோ எட்டப்படவில்லை என அவர் வலியுறுத்தினார்.
பாதாள உலகக் குழுக்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட அவற்றுடன் தொடர்புடைய செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடியபோது பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட யோசனைகளில் ஒன்றாகவே இதனை கருத முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.




