மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மைக்கு சிறைகளில் நிலவும் அதிக நெரிசல் ஒரு காரணமாக இருக்கக்கூடும் எனவும், இதன் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட வெளிப்புற தலையீடு உள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த மோதல் பெரும்பாலும் கைதிகளுக்கும் சிறை நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பட்டதாகத் தெரியவுள்ளதாக குறிப்பிட்டார்.
எனினும், வன்முறையை தூண்டுவதற்கு வெளிப்புற தரப்புகளின் தாக்கம் இருந்ததா என்பது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் முன்னெடுத்து வரும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் காரணமாக சிறைகளுக்குள் போதைப்பொருள் செல்வது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவும் இந்த அமைதியின்மைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சிறைகளில் நிலவும் அதிக நெரிசல் ஒரு தீவிர பிரச்சினை என்பதை ஏற்றுக்கொண்ட அமைச்சர், இதுவே இவ்வாறான சம்பவங்களுக்கு ஒரே காரணம் அல்ல என்றும் குறிப்பிட்டார்.
சிறைகளின் கொள்ளளவை அதிகரித்தல், இரசாயன பரிசோதனை அறிக்கைகளின் தாமதத்தை குறைத்தல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளில் பிணை நடைமுறைகளை விரைவுபடுத்துதல் உள்ளிட்ட சட்ட திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
தற்போது போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் சுமார் 23,000 கைதிகள் சிறைகளில் உள்ளதாக தெரிவித்த அமைச்சர், போதைப்பொருள் பிரச்சினையை சட்ட அமுலாக்க நடவடிக்கைகளால் மட்டும் தீர்க்க முடியாது என்றும் வலியுறுத்தினார்.




