சமூக வலைத்தளத்தில் முகமது நபி குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்து பதிவிட்டதாகக் கூறப்படும் வழக்கில், சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த தமிழரான அனோஜனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
மேலும், 3 மில்லியன் சவுதி ரியால் (இலங்கை மதிப்பில் சுமார் 27 கோடி ரூபாய்) அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அனோஜன் கடந்த ஜூன் 30ஆம் தேதி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டார். ஃபேஸ்புக் பதிவொன்றின் கீழ் அவர் வெளியிட்ட கருத்து, அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அதிகாரிகளிடம் முறைப்பாடாக சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துக்குப் பின்னர் தனது கருத்தை நீக்கியதுடன், அது தவறான பதிவு என ஒப்புக்கொண்டு இஸ்லாமிய சமூகத்திடம் மன்னிப்பும் கோரி காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதற்கிடையில், அவரை விடுவிக்க இலங்கை வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளிடம் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, நீதிமன்றம் விதித்துள்ள அபராதத் தொகையை திரட்டுவதற்காக பொதுமக்கள் அனோஜனின் குடும்பத்தினருக்கு நிதி உதவிகளை வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




