கண்டி பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில், அப்பாடசாலையின் மாணவர் தலைமைப் பேரவையைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவரின் தாயார் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாணவர் தலைவர்களின் தாக்குதலுக்கு உள்ளான குறித்த மாணவர் தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேவேளை, அவர் மற்றுமொரு மாணவரை தாக்கியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், நேற்று (29) பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
மாணவர் தலைவர்கள் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த மாணவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பெற்றோரின் முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, சந்தேகநபர்களான மாணவர் தலைவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.




