ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புகளில் சட்டவிரோத மதுபானத்துடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2026 ஜூலை 23 ஆம் திகதி மாலை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினரால் கிடைத்த தகவலின் அடிப்படையில் ராகம பொலிஸ் பிரிவின் பொடிவீகும்புர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 262 லீற்றர் 500 மில்லிலீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் (350 போத்தல்கள்) சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 53 வயதுடைய கந்தானை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மேலதிக விசாரணைகளுக்காக ராகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ராகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட மற்றுமொரு சுற்றிவளைப்பில் மஹர நுகேகொட பகுதியில் 67.5 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன் (90 போத்தல்கள்) மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டாவது சந்தேகநபரும் 53 வயதுடைய மஹர நுகேகொட பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவங்கள் தொடர்பில் ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




