வத்தளை பள்ளியவத்தை, கதிரான பாலம் அருகிலுள்ள விழா மண்டபத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய சுமேத என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
பொலிஸாரின் தகவலின்படி, அமைப்புசார்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் "குடு ரொஷான்" என்பவரின் மகனின் பிறந்தநாள் விழா அங்கு நடைபெற்றிருந்தது. தாக்குதலின் இலக்கு குடு ரொஷான் என சந்தேகிக்கப்படுகின்றது.
எனினும், தவறுதலாக அவரது நெருங்கிய நண்பரான சுமேத மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கருப்பு நிற கார் பின்னர் ஜா-எல பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலவி வந்த மோதலே இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.




