கதிர்காமம் ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ள கதிர்காமம் காட்டுப்பாதை நாளை (24) மாலை 3 மணியுடன் மூடப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாண்டு ஆடிவேல் உற்சவத்தில் பங்கேற்பதற்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக கதிர்காமம் நோக்கி பயணித்து வருகின்றனர்.
தற்போது பல பக்தர்கள் உகந்தை மலை முருகன் ஆலயத்தை சென்றடைந்து, அங்கிருந்து காட்டுப்பாதை வழியாக கதிர்காமம் நோக்கிச் சென்று வருகின்றனர்.
கதிர்காமம் காட்டுப்பாதை கடந்த 10ஆம் திகதி பக்தர்களுக்காக திறக்கப்பட்டதுடன், திறக்கப்பட்ட முதல் நாளிலேயே சுமார் 12,000 பக்தர்கள் இந்தப் பாதை வழியாக பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நாளை மாலை 3 மணிக்குப் பின்னர் எந்தவொரு பக்தருக்கும் காட்டுப்பாதைக்குள் நுழைய அனுமதி வழங்கப்படமாட்டாது என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கதிர்காமம் ஆடிவேல் உற்சவம் கடந்த 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில், எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.




