ஜனாதிபதி மாளிகை மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை அரச உத்தியோகபூர்வ வசிப்பிடங்களாக பயன்படுத்தாமல், மக்கள் மற்றும் வர்த்தக தேவைகளுக்காக பயன்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை ஜனாதிபதி மாளிகை மற்றும் அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை பயன்படுத்துவதில்லை என பிரதமர் குறிப்பிட்டார்.
குறித்த கட்டிடங்கள் பழுதடைவதைத் தடுத்து பராமரிப்பதுடன், அவற்றை மக்கள் மற்றும் வர்த்தக பயன்பாடுகளுக்காக மாற்றும் விசேட வேலைத்திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவொன்று ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட இத்தகைய சொத்துக்களை வர்த்தக அல்லது பிற பொது பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவது தொடர்பில் பரிந்துரைகளை வழங்கியுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
மேலும், முன்னாள் அமைச்சர்களின் சில உத்தியோகபூர்வ இல்லங்கள் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் நீதித்துறையின் செயற்பாட்டு திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




