நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான 'இராமாயணம்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு முன்னோட்ட நிகழ்வில், சீதா கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து நடிகை சாய் பல்லவி பகிர்ந்த கருத்துகள் இணையத்தில் அதிக கவனம் பெற்றுள்ளன.
புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய சாய் பல்லவி, தெய்வீகமான கதாபாத்திரத்தில் நடிப்பது எளிதான விஷயம் அல்ல என்றும், சீதா கதாபாத்திரம் தனக்குக் கிடைத்தது தாம் தேர்ந்தெடுத்த வாய்ப்பை விட இறைவனின் ஆசீர்வாதமாகவே கருதுவதாகவும் தெரிவித்தார்.
அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கத் தொடங்கும் முன் தியானம் செய்து சீதா தேவியின் ஆன்மீக ஆசீர்வாதத்தை வேண்டிக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
இரு பகுதிகளாக உருவாகும் இந்த திரைப்படத்தின் முதல் பகுதி 2026 நவம்பர் 8ஆம் திகதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஜூலை 24ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
