நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் போது இம்முறை ஐந்து விடயங்களுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா தெரிவித்துள்ளார்.
வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
உற்சவ ஏற்பாடுகள் தொடர்பாக நடைபெற்ற ஆரம்பகட்ட கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த மாநகர முதல்வர், கடந்த காலங்களில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, உற்சவ காலங்களில் வியாபார நிலையங்களில் சினிமா பாடல்கள் ஒலிக்கச் செய்தல், ஆடல் பாடல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுதல் தடை செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுவோரின் ஒலி, ஒளி சாதனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமய நிகழ்வுகளுக்கு தொடர்பில்லாத காட்சிகள், காணொளிகள் மற்றும் விளம்பரங்களை ஒளிபரப்புவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆலய சுற்றாடலில் ட்ரோன் கமராக்களை பயன்படுத்துவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், உற்சவ பகுதிக்குள் வியாபாரம் செய்தல் மற்றும் யாசகம் பெறுதலும் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




