இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்காக தற்போது நடைமுறையில் உள்ள QR குறியீட்டு முறையை நீக்கும் எந்தத் திட்டமும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூர நெத்திக்குமார தெரிவிக்கையில், உலக சந்தையில் எரிபொருள் விலைகளின் நிலையற்ற தன்மையும், உலகளாவிய அரசியல் பதற்றமும் காரணமாக QR முறை தொடர்ந்து அமுலில் இருக்க வேண்டியது அவசியம் என்றார்.
QR முறையின் மூலம் எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்த முடிவதால், நாட்டின் குறைந்தளவிலான அந்நியச் செலாவணி இருப்பை திறம்பட நிர்வகிக்க முடியும் என்றும் அவர் கூறினார். மேலும், உலகளாவிய போர் சூழ்நிலை தீவிரமடைந்தால் எரிபொருள் தட்டுப்பாடும் நீண்ட வரிசைகளும் ஏற்படாமல் தடுக்கவும் இந்த முறை உதவும் என்றார்.
தற்போதைய உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும் இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், நுகர்வோருக்கு இடையறாத எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.




