மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் தகவலின்படி, குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த ஜூலை 15 ஆம் திகதி தம்புள்ளை கம்உதாவ விளையாட்டரங்கில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு கடமையை முடித்துவிட்டு மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்துக்கு திரும்பியிருந்தார்.
அங்கு நாற்காலியில் அமர்ந்திருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளின் மடியில் அமர முயன்றதாகக் கூறி, அவர் நிலையப் பொறுப்பதிகாரி ஊடாக பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சம்பவம் நடைபெற்ற போது குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் மதுபோதையில் இருந்தமை தெரியவந்துள்ளது.
பெண் பொலிஸ் அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்ள முயன்றமை மற்றும் கடமையின்போது மதுபோதையில் இருந்தமை தொடர்பான ஒழுக்காற்று விசாரணைக்குப் பின்னர் அவர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




