மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் உலகளாவிய மற்றும் பிராந்திய தகவல்களை இலகுவாக அறிந்துகொள்ளும் வாய்ப்பை ‘அரப் நியூஸ்’ பத்திரிகையின் புதிய சிங்கள பதிப்பு ஏற்படுத்தியுள்ளதாக இலங்கை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை செய்திகளைப் பெற்றுக்கொள்வதில் பல இலங்கையர்களுக்கு முக்கிய தடையாக இருந்தது மொழி என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 75 சதவீதத்தினர் சிங்கள மொழியைப் பயன்படுத்துகின்றனர். இது நாட்டின் மிகப்பெரிய மொழி மற்றும் இனக்குழுவாகும்.
2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மொழிபெயர்ப்பு வசதியின் ஒரு பகுதியாக ‘அரப் நியூஸ்’ நிறுவனம் இந்த சிங்கள பதிப்பை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் வாசகர்கள் செய்திகளை 50 மொழிகளுக்கு மொழிபெயர்த்து வாசிக்க முடியும்.
சிங்கள பதிப்பின் உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வு 2026 ஜூலை 5 ஆம் திகதி ரியாத்தில் சவுதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் அமீர் அஜ்வாட் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த தூதுவர், ஆங்கில மொழியில் போதிய அறிவு இல்லாத சவுதி அரேபியாவில் வசிக்கும் பெருமளவான சிங்கள மொழி பேசும் இலங்கையர்களுக்கு இந்த புதிய வசதி பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார்.
மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 1.2 மில்லியன் இலங்கையர்கள் தொழில்புரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வளைகுடா ஒத்துழைப்பு பேரவையின் ஆறு நாடுகளில் வசிக்கின்றனர்.
சவுதி அரேபியாவில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக வசிக்கும் இலங்கை தொழிலதிபர் நிஹால் கமகே, தாம் வாழும் பிராந்தியத்துக்கு தொடர்புடைய செய்திகளை தமது சொந்த மொழியில் வாசிக்க முடிவது முக்கிய முன்னேற்றம் என தெரிவித்தார்.
வெளிநாட்டு இலங்கையர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி எச். எம். ரபீக், சிங்கள மொழியை தாய்மொழியாகக் கொண்ட மக்களுக்கு இந்த சிங்கள பதிப்பு ஒரு சிறந்த வாய்ப்பு என குறிப்பிட்டார்.




