‘டிட்வா’ அனர்த்தத்தால் பதுளை மாவட்டத்தில் வீடுகளையும் சொத்துக்களையும் இழந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைக்கும் நோக்கில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள விசேட வீடமைப்புத் திட்டம் மூன்று மாதங்களுக்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி மஹியங்கனை மெதயாய கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள பொலிஸ் பயிற்சி பாடசாலைக்கு அருகிலுள்ள அரச காணியில் இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
முதற்கட்டமாக வீடுகளை முழுமையாக இழந்த 11 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் நிர்மாணிக்கத் தொடங்கப்பட்டதுடன், ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ரூ.20 இலட்சம் பெறுமதியான காசோலைகளும் வழங்கப்பட்டன.
தற்போது அந்த 11 வீடுகளும் கூரை மட்டம் வரை நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அதே வளாகத்தில் மேலும் 5 வீடுகளின் கட்டுமானப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்தம் 16 வீடுகள் துரிதமாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.
இரண்டாம் கட்ட நிதி கிடைத்தவுடன் மீதமுள்ள பணிகளையும் உடனடியாக நிறைவு செய்யத் தயாராக இருப்பதாக பயனாளிகள் தெரிவித்துள்ளனர். மஹியங்கனை பிரதேச செயலகத்தின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், அனர்த்தத்தால் வீடிழந்த மக்களுக்கு குறுகிய காலத்தில் நிரந்தர வீடுகளை வழங்கும் முன்மாதிரி திட்டமாகக் கருதப்படுகிறது.




