சமூக ஊடகங்களில் காணொளியொன்றை வெளியிட்டதுடன், ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தி எவ்வித உறுதிப்படுத்தலும் இல்லாமல் தவறான தகவல்களைப் பரப்பிய நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் (TID) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்ததன்படி, குறித்த கைது நடவடிக்கை நேற்று (18) இடம்பெற்றுள்ளது.
அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலை வனப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக சந்தேகநபர் சமூக ஊடகங்கள் மூலம் தவறான மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வெளியிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த TID அதிகாரிகள் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 46 வயதுடைய, பொரலஸ்கமுவ, பெல்லன்வில பகுதியைச் சேர்ந்தவராவார்.
சந்தேகநபருக்கு எதிராக இலங்கை தண்டனைச் சட்டக்கோவை மற்றும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.




