கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுகாதார அலுவலகத்தில் பணியாற்றிய பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடளாவிய ரீதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று (21) அடையாள சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக பி.எச். மீகஸ்தெனிய என்ற பொது சுகாதார பரிசோதகர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டுகிறது.
கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகத்தினால் பல ஆண்டுகளாக பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அங்கு இடம்பெறுவதாகக் கூறப்படும் ஊழல், முறைகேடுகள் மற்றும் பொது நிதி முறைகேடு தொடர்பில் அதிகாரிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் அறிவித்துள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இறுதியாக 2026 ஜூலை 12ஆம் திகதி PHIU/Sec/2026/42 என்ற இலக்கத்தைக் கொண்ட கடிதம் மூலம் முறைப்பாடு ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளதாக சங்கம் கூறுகிறது.
எனினும், குற்றச்சாட்டுகள் தொடர்பில் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை எந்தவொரு விசாரணையும் நடத்தப்படவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
மீகஸ்தெனியவின் இடமாற்றத்தை இரத்துச் செய்வதுடன், சங்கத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட முறைகேடுகள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு கோரி இந்த நாடளாவிய அடையாள தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.




